உலகம் நமக்காக!

உலகம் நமக்காக!

Wednesday, 21 September 2011

கதை கேளு....கதை கேளு....1-குருவிகளும் 'அந்நியன்' சோடாவும்!

              நண்பர்களே....வணக்கம். சிறுவயதில் இருந்தே கதைகளைக் கேட்டும், படித்தும் வருகிறேன். உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருக்கும். நூலகங்களில் தேடித் தேடி கதைப் புத்தகங்கள் படித்த காலம் உண்டு. பஞ்ச தந்திர கதைகள், கிரேக்க கதைகள், முல்லா கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று தொடங்கிய வாசிப்பு அண்ணா, கல்கி, தேவன், ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்கள் வரை நீண்டது. பள்ளி உணவு இடைவேளையில், நான் படித்த 'காமிக்ஸ்' ராஜா ராணி கதைகளைக் கேட்க என்னுடன் உணவருந்தும் நண்பர்கள் - இன்றும் என் பசுமையான நினைவில். பல குட்டிக்கதைகள் அடிக்கடி என் நினைவில் வரும். அதுவும் அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப அந்தக் கதைகள் இருப்பது எனக்கு ஆச்சர்யமே! அப்படிப் பட்ட குட்டிக்கதைகளையும் என் சிந்தனைகளையும் சேர்த்து உங்களோடு பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். இந்தக் கதைகள் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இருப்பினும் இது உங்களுக்கு சில நினைவுகளையும் சிந்தனைகளையும் எழுப்பினால் மகிழ்ச்சியே!
----------------------------------------------------------------------
              ஒரு ஊர்ல வயல்வெளி பக்கத்துல ஒரு மரம் இருந்துச்சு. அதுல ஒரு அம்மா குருவியும், குட்டிக்குருவியும் இருந்துச்சு. ஒரு நாளு அந்த வயலுக்குச் சொந்தக்காரர் தன்னோட மகனோட அந்தப் பக்கம் வந்தார். "இந்த பக்கம் போய் வர இந்த மரம் இடைஞ்சலா இருக்கு. நாளைக்கு அடுத்த ஊர்ல இருந்து ஆளுங்களை வரச் சொல்லு. இந்த மரத்தை வெட்டிடுவோம். சரியா" என்றவாறே சென்றார் அப்பா. இதைக் கேட்டுகிட்டு இருந்த குட்டி குருவி, "யம்மா, யம்மா...இந்த மரத்தை நாளைக்கு வெட்டப் போறாங்களாம். நாம வேற மரத்துக்கு போய்டலாம்" என்றது. அம்மா குருவி, "அதெல்லாம் வெட்ட மாட்டாங்க...நீ பயப்படாதே" என்றது. நாட்கள் உருண்டோடியது.


              அதே மரம் - அம்மா குருவி, குட்டிக்குருவி - அப்பா, மகன். "இந்த பக்கத்தூர்காரங்களே இப்படித் தான். சொன்னா சொன்னபடி வரதில்ல. நாளைக்கு உங்க சித்தப்பன்களை கூட்டிகிட்டு வந்து வேலைய முடிக்கணும்" என்றபடியே சென்றார் அப்பா. மறுபடியும் பதைபதைத்தது குட்டிக்குருவி. "அச்சச்சோ...நாளைக்கு கண்டிப்பா மரத்தை வெட்டிடுவாங்க போல. நாம வேற மரத்துக்கு போலம்மா" என்ற குட்டிக்குருவியிடம் அம்மாக்குருவி பதட்டமில்லாமல் சொல்லியது, "அதெல்லாம் ஒன்னும் ஆகாது...நீ பேசாம இரு". மீண்டும் நாட்கள் உருண்டோடியது. 

               மீண்டும் அப்பக்கம் வந்த அப்பா, "இது சரிபட்டு வராது. அவன் அவன் 'எனக்கு வேலை இருக்கு. அது இது'னு சொல்லிக்கிட்டு இருக்கானுங்க. சாயங்காலம் நானே வரேன். இந்த மரத்தை வெட்டிட்டு தான் மறுவேலை" என்று மகனைப் பார்த்துச் சொன்னார். இதைக் கேட்ட குட்டிக்குருவி, "இவங்க எப்பவுமே இப்படித் தான். மரத்தை வெட்டவே மாட்டாங்க" என்று சிரித்துக்கொண்டே சொன்னது. அம்மா குருவியோ பதட்டத்துடன், "நாம உடனே வேற மரத்துக்குப் போகணும். இவங்க மரத்தை வெட்டிடுவாங்க" என்றது. "இப்போ மட்டும் ஏன் இப்படி"னு கேட்ட குட்டிக்குருவியிடம் அம்மா குருவி சொன்னது "இவங்க இவ்வளவு நாள் ஒரு காரியத்தை முடிக்க மத்தவங்களை நம்பிகிட்டு இருந்தாங்க. எப்போ இவங்களே செய்யணும்னு இறங்கிட்டாங்க. அப்போ காரியம் முடியப் போகுதுன்னு அர்த்தம்". அம்மாவை ஆச்சர்யத்துடன் பின்தொடர்ந்தது குட்டிக்குருவி.

             அம்மா குருவி சொன்னது குட்டிக்குருவிகு மட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தான். என் கல்லூரி நண்பனுக்குத் திருமணம். என்ன பரிசு கொடுக்கலாம்னு விவாதம் கிளம்பியது. ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள். ஒரு நண்பன் வங்கியின் 'பரிசு அட்டை' (Gift card) கொடுக்கலாம்னு சொன்னான். பொதுவாக வங்கிகள் வழங்கும் டெபிட் கார்டு போன்றே அதை நாம் பயன்படுத்தலாம். ஆனால் காசாக எடுக்க முடியாது. எதாவது பொருள் வாங்கி விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் காசாகக் கொடுக்காமல், பரிசையும் நண்பனே தேர்வு செய்துக் கொள்ளலாம். இதெல்லாம் சரி. எந்த வங்கி அதைக்கொடுக்கிறது, அதற்கான கட்டணம் என்ன, நண்பன் வெளிநாட்டில் இருப்பதால் அதைப் பயன்படுத்த முடியுமா என்பது போன்ற பல கேள்விகள். இப்போதுதான் ஆரம்பித்தது விளையாட்டு. விவரங்கள் யாருக்குத் தெரியும் என்று கேட்கத் தொடங்கினார்கள். யாராவது விசாரியுங்களேன் என்ற குரல்கள் கேட்டது. இது போன்றச் சமயங்களில் எனக்கு 'அந்நியன்' பட 'சோடா' காட்சி தான் ஞாபகத்துக்கு வரும்.

              'அந்நியன்' படத்தில் ஒரு காட்சி. ரோட்டில் ஒருத்தர் அடிபட்டுக் கிடப்பார். அப்போது ஒருத்தர் 'யாராவது சோடா வாங்கிட்டு வாங்களேன்'னு ஒருத்தர் சொல்லிக்கிட்டு ஒன்னும் பண்ணாம நிற்பார். இது நினைவுக்கு வந்தவுடன் சோம்பல்களை உதறிவிட்டு எனக்குள்ளிருந்து ஒரு 'அந்நியன்' வெளியே குதித்து விடுவான். யாராவது செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கணும்? நம்மால செய்ய முடியுமா, முடியாதா? 'முடியும்' என்பது விடையாக இருந்தால் களத்தில் இறங்கி விடுவேன். இது நம்மால் ஆனதை செய்யாமல் 'வாய் வேதாந்தம்' பேசுவதை தவிர்க்க நான் கையாளும் முறை. நம்மால் முடிந்ததை நாமே செய்வோம். ஏன்னென்றால் மற்றவர்களுக்கு உங்கள் வேலையில் இருக்கும் அக்கறையை விட உங்களுக்கு உங்கள் வேலை மேல் இருக்கும் அக்கறை அதிகமில்லையா?

 

Friday, 2 September 2011

'பாசக்கார' தலைவர் அறிக்கையும் 'படிக்காதவன்' காமெடியும்!

முன்குறிப்பு: நான் யாருடைய ஆதரவாளரும் இல்லை, எதிர்ப்பாளரும் இல்லை. நியாயத்தின் பக்கமே எப்போதும்!

ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம 'தமிழ்த்தாய்' - அதாங்க 'அம்மா'  சட்டமன்றத்துல விதி 110 க்கு கீழ  ஒரு அறிக்கை படிச்சாங்க. அதுல பேரறிவாளன் உள்ளிட்ட மூணு பேரை காப்பாத்தற சக்தி என்கிட்டே இல்லனு சொன்னாங்க. அதுக்கு பதில் அளிக்கற மாதிரி நம்ம 'அய்யா' - ஓ குழப்பமாகுதா....சரி..நம்ம 'பாசக்கார' தலைவரு நேத்து ஒரு அறிக்கை உட்டாரு.

தமிழ்த்தாய் : 
சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:
"தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
(அதாவது அமைச்சரவை எடுத்த முடிவு - நளினியை காப்பாத்தலாம், மத்தவங்களை போட்டு தள்ளலாம்-நோ ப்ரோப்ளம்!)

பாசக்கார தலைவர் :
29.8.2011 அன்று 110-வது விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை படித்த முதலமைச்சர் ஜெயலலிதா, 19.4.2000 அன்று தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றும், மற்றவர்களின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தன்னையும் அறியாமல் நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைவதற்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
(இப்போ பேசறது மூணு பேரோட தூக்கு தண்டனையா பத்தி. எதுக்கு நளினியை உள்ள இழுக்கறீங்க?? அப்போ அந்த மூணு பேரை 'போட்டுத்தள்ள சொன்னது நீங்க தானா??)

உச்சநீதிமன்றம் நளினி உள்ளிட்ட இந்த நால்வரின் தூக்கு தண்டனையை 11.5.1999 அன்று உறுதி செய்தது. அதே உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும் 8.10.1999 அன்று நிராகரிக்கப்பட்டு விட்டது. 17.10.1999 அன்று ஆளுநரிடம் அளித்த கருணை மனுக்களை அவர் 27.10.1999 அன்று நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்தான் 25.1.1999 அன்று ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து விட்டு, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்கிட தீர்ப்பளித்தது. அந்த சூழ்நிலையில்தான் 19.4.2000 அன்று கழக அமைச்சரவை கூடி முடிவெடுத்தது.
(தலைவரே....என்ன முடிவேடுத்தீங்கனு சொல்றதை மட்டும் 'கரெக்டா' விட்டுடீங்க!!)

தமிழ்த்தாய் : இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

பாசக்கார தலைவர் : ஜெயலலிதா படித்த அதே அறிக்கையில்- "இந்த மூன்று நபர்களும் குடியரசு தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின் படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது'' என்றும் சொல்லியிருக்கிறார். அவ்வாறு 28.4.2000 அன்று தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு அந்த கருணை மனுக்களை அனுப்பி வைத்ததின் காரணமாகத்தான் அவர்கள் மூவரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் இந்த 11 ஆண்டு காலமும் அவர்கள் சிறையில் நீடிக்க முடிந்தது என்பதை ஜெயலலிதாவே தனது அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
(ஓ...ஆளை போடவும் சொல்லிட்டு 'போஸ்ட்மேன்' வேலை செய்ததை மட்டும் பெருமையா சொல்லிக்க வேண்டியது!)

இத பாக்கும் போது, தனுஷோட 'படிக்காதவன்' படத்துல வர விவேக் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது.

வில்லனோட அடியாள்: யார் இங்க 'கேங் லீடர்' (பாசக்கார தலைவர்)
தனுஷ்: ம்...கேங்கும் இவர் தான் லீடரும் இவர் தான் (திமுகவும் இவர் தான்...தலைவரும் இவர் தான்)
அடியாள்: உங்கள சமரசிம்மா ரெட்டி வர சொன்னாரு....(தமிழ்த்தாய்!!)
விவேக்: ஏன்?
அடியாள்: ஏன்னா....இது அவர் கண்ட்ரோல்ல இருக்கற ஏரியா...(கரண்ட் தமிழ்நாடு?)
விவேக்: அது நேத்து ஆறு மணிவரைக்கும்....ஆறு முப்பது மணில இருந்து இந்த கேங் லீடர் கன்ட்ரோலுக்கு வந்தாச்சு (எப்போ?)
அடியாள்: அந்த 'டீல்' விஷயமாத்தான் ஒரு தடவையாவது உங்களை பாக்கணும்னு அங்க கூட்டிட்டு வர சொன்னாரு.
விவேக்: ஒழுங்கா அவன் இங்க வந்து என்ன பாத்தான்னா 'செய்கூலி' இல்ல ஆனா 'சேதாரம்' உண்டு. நான் அங்க வந்தா 'செய்கூலியும் உண்டு சேதாரமும் உண்டு'.
தனுஷ்: இப்போ அவன் கேட்டதுக்கும் நீங்க சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்? (அதையே தான் நாங்களும் கேட்கறோம் தலைவரே!)

விவேக்: 'பஞ்ச்' நல்லா இருக்குதானு மட்டும் பாக்கணும், அதுல ஆராய்ச்சி பண்ணக்கூடாது...இதை எழதி மனப்பாடம் பண்ண எவ்வளவு சிரம பட்டேன் தெரியுமா?? (நாங்க தான் சிரம படறோம் உங்க கூத்தால :()

இப்படி அறிக்கை, எதிர் அறிக்கை எல்லாம் படிச்சு டென்ஷன் ஆக வேண்டாம்னு நானும் நெனைக்கறேன். ஹ்ம்ம்...எங்க முடியுது. அவங்களும் நிறுத்த மாட்டாங்க, நாமும் நிறுத்த மாட்டோம்!!